சிவகாசி அருகே, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா பால்குடம் எடுத்து,நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் பரவசம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் சாலை முத்துராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. வளர்பிறை வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாசி திருவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். பால்குடம் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அரசமர விநாயகர் கோவிலில் இருந்து பால்குடங்கள் சுமந்து, முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இதனையடுத்து ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழந்தருளிய ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.