தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பான வீடியோவை கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக பொய் தகவலை வட இந்திய பத்திரிகை வெளியிட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே, திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்ற தொழிலாளரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர், சஞ்சீவ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததை உறுதி செய்தனர். ஆனால், அவரது செல்போன் உள்ளிட்டவற்றை காணவில்லை. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வட மாநில தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளியின் மரண விவகாரத்தில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா விளக்கம் அளித்தார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அனைத்துத் தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, வடமாநிலத்தவர்கள் தாக்குவது தொடர்பான வீடியோவை கண்டு அச்சமடைந்த தொழிலாளர்கள், ரயிலில் முண்டியடித்து கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் தங்களது சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில், 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் வடமாநில தொழிலாளா்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.