




காரைக்கால் மாவட்டம் திருதெளிச்சேரி எனும் தலத்தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலயத்தில் கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடனும் விக்னேஸ்வர பூஜையுடன் சித்திரை திருவிழா துவங்கியது.

அன்றிலிருந்து அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ தங்க மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் தங்க மாரியம்மனுக்கும் உற்சவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீக்குழி அருகே தங்க மாரியம்மன் எழுந்தருளியதை அடுத்து தீமிதி நடைபெற்றது.

இதில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதியின் போது வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், கோயில் அறங்காவல் குழுவினர்கள், ஊர் பொது நல சங்கம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் தீமிதி திருவிழாவை காண திரண்டு இருந்தனர்.

