• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப் போட்டிகள்- ஆட்சியர் தகவல்..,

ByVelmurugan .M

Oct 6, 2025

தமிழ்நாட்டிலுள்ள 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், பெரம்பலூர்  மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான  கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 14.10.2025 (செவ்வாய்கிழமை) ஆம் நாளன்றும்,  கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 15.10.2025     (புதன்கிழமை) ஆம் நாளன்று பெரம்பலூர் பாரத, சாரண சாரணியர் பயிற்சி மையத்தில் காலை 09.30 மணிக்கு நடைபெறவுள்ளன.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியர்/முதல்வர் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்கவேண்டும்.

ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/- என பரிசுத் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.