• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு, கிடு உயர்வு ..,

BySeenu

May 27, 2025

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடிக்கும் மேல் உயர்ந்து உள்ளது.

நடப்பாண்டில் முதல் முறையாக இந்த அளவு நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுவாணி அடிவாரப் பகுதியில் 86 மி.மீ மழையும், அணைகட்டு பகுதியில் 107 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. நேற்று 26.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 30.24 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 12 அடிக்கும் மேல் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. மே 23-ஆம் தேதி 17.91 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 30.24 அடியாக உயர்ந்து உள்ளது.

அணையின் முழு கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், மழை தொடர்ந்து பெய்தால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவாணி அணை நீர், கோவை மாநகராட்சியின் 22 வார்டுகள், கோவை மாவட்ட மேற்குப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து தினமும் 63.72 எம்.எல்.டி. நீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், கோவை மக்களின் குடிநீர் தேவை இனி வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.