மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு விழா கொண்டாடப்பட்டது. சந்தனக்கூடு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய விழாவில் இந்துக்களும் கலந்து கொண்டனர்.
அனைத்து சமுதாய மக்களின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு தூவா பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்திருக்கும் சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, மலைக்கு கீழே உள்ள பள்ளிவாசலில் இருந்து மலை மீது உள்ள தர்கா வரையிலும் அனைத்து பாதைகளிலும் வண்ண மின் விளக்குகளால் ஒளி மின்னும் வகையில் அலங்கரிக்கப்பட்டது.
மேலும் தர்காவிற்கு கொண்டு செல்வதற்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்ட சந்தனக் குடத்தை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று அடுக்கு சப்பரத்தில் வைத்து சப்பரத்தை பாரம்பரிய முறையில் மாட்டு வண்டியில் பூட்டி பெரிய ரத வீதி, கீழரதவீதி, மேல ரதவீதிகளில் வலம் வந்தடைந்தது.
பின்னர் மலை மீது இருக்கும் தர்காவிற்கு சந்தன குடம் எடுத்துச் செல்லப்பட்டு சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் இருக்கும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா சமாதி மீது பூசப்பட்டு பச்சை கம்பளம் சாற்றப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு துவாக்கள் செய்யப்பட்டது.
மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக உலக மக்களின் நலனுக்காகவும், அனைத்து சமுதாய ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
முன்னதாக இந்த சந்தனக்கூடு விழாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சந்தனக்கூடு விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தர்காவிலிருந்து பிரார்த்தனை செய்த சிறப்பு சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது.