• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் விடுமுறை

Byவிஷா

May 3, 2025

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42ஆவது வணிகர் தின மாநாடு மே 5ஆம் தேதியன்று மதுராந்தகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வணிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் தின மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 42-வது வணிகர் தின மாநில மாநாடு செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகத்தில் மாலை 3.35 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 29 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. போதிய வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். வணிகளின் நலனைக் காக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும், வணிகர்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டு தீர்வுகாணப்பட உள்ளன.
மாலையில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து வணிகர்களுக்கும் மாலை சிற்றுண்டி, இரவு உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வணிகர் தின மாநாட்டை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் மொத்த மற்றும் சில்லரை வணிக நிறுவனங்கள், சந்தைகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் விடுமுறை விடப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.