• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சாக்கடை கழிவுநீர் நெற்பயிருக்குள் சென்ற அவலம் – நீரில் மூழ்கிய நெல்மணிகள் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

ByP.Thangapandi

May 15, 2024

உசிலம்பட்டி நகராட்சியில் சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் மழைநீருடன் கலந்து நெற்பயிருக்குள் சென்ற அவலம் – நீரில் மூழ்கிய நெல்மணிகள் மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலிருந்து வரும் சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான வடிகால் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை நீடித்து வருகிறது.

உசிலம்பட்டி கண்மாய், கவணம்பட்டி, கொங்கபட்டி என பல பகுதிகளில் உள்ள ஊரணிகளில் இந்த சாக்கடை கழிவுநீர் தேங்கி வரும் சூழலில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாக்கடை கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து, மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து உடைப்பு ஏற்பட்டு கொங்கபட்டி ஊரணி அருகே புத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.

மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து வந்தால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த 3 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கழிவுநீர் தேங்கியதால் சாய்ந்த நெல்மணிகள் விளைநிலத்திலேயே மீண்டும் முளைத்து சேதமடைந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து சாக்கடை கழிவுநீர் செல்ல முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு, சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.