கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மோடியை பிரதமர் என்றும் பாராமல் தரக்குறைவாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் உழவர் சந்தை எதிரில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது தேர்தல் நாளுக்குள் செந்தில் பாலாஜி வெளியே வருவார், மக்களை சந்திப்பார். தேர்தல் முடிவை அவர் நிர்ணயம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீதியை நாம் நம்புகிறோம். ராமரை நாங்களும் கூப்பிடுகிறோம். ஆனால், அந்த ராமர் பாஜகவுக்கு மிகப்பெரிய தண்டனையை இந்த தேர்தலில் கொடுக்கப் போகிறார்.
ஒரு இருதய நோயாளி, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு ஜாமீன் கேட்டால், மோடி அவரை சிறையிலேயே வையுங்கள் ஜாமீன் கொடுக்க கூடாது என்கிறார். எவ்வளவு நாட்களாக சிறை பிடித்து வைத்திருக்கிறார்கள். அவர் செய்த தவறு என்ன? கொங்கு மண்ணில் பாஜகவும், அதிமுகவும் வெற்றி பெற முடியாமல் செய்ததுதான் அவருடைய தவறு.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் கின்னஸ் சாதனை படைக்கும் அளவிற்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்தியாவிலே முதன்மையாகவும், தமிழ்நாட்டில் முதன்மை தொகுதியாக நாம் வெற்றி பெற வேண்டும். அதிகப்படியான வாக்கு சேகரிப்பதும் மோடிக்கு செருப்படி கொடுக்கும் வகையில் இருக்கும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.