ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தேனீக்கள் மாற்றுத்திறனாளிகளின் அறக்கட்டளை மற்றும் வின்னர் ஸ்போர்ட்ஸ் இணைந்து கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான
சுயதொழில் துவக்க விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் கூடலூரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் ஆசிரியர் பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் அழகேசன், பொருளாளர் பாண்டி முன்னிலை வகித்தனர். கூடலுார் அருகே கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் 30. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் இவரது வலது கால் பறிபோனது. இவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பெட்டிக் கடை வைத்து கொடுக்கப்பட்டது. அதேபோல், கம்பத்தை சேர்ந்த தவழும் மாற்றுத் திறனாளியான செல்வராஜ் என்பவருக்கு கைவண்டி வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிர்வாகி சிலர் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கம்பத்தில் தேனீக்கள் மாற்றுத்திறனாளிகளின் அறக்கட்டளை துவக்கப்பட்டது. கம்பம், கூடலூர், உத்தமபாளையம் மட்டுமின்றி கிராமப் புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம். குறிப்பாக தையல் மிஷின், அயர்ன் பாக்ஸ், மூன்று சக்கர சைக்கிள் போன்றவை வழங்கியுள்ளோம்.
இது தவிர, 2,500 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் இது போன்ற சேவைப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது,’ என்றனர்.