ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு குறித்த அறிந்த சசிகலா 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 63. ஓ.பி.எஸ். மனைவியின் திடீர் மறைவு அதிமுக தொண்டர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.
ஓ.பி.எஸ் மனைவியின் உடலை தேனி எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்திரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக கொடி கட்டிய காரில் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்ற சசிகலா, ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மனைவியின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் கைகளைப் சசிகலா ஆறுதல் கூறினார்.