ஆழ்கடலில் உள்ள கனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, இந்திய தொழில்நுட்பத்தில் அதிநவீன கடல் சார் ஆராய்ச்சி கப்பல் விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள், கனிமங்கள், அங்குள்ள நிலப்பரப்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆழ்கடலில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு மனிதனை சென்று அழ்கடல் நிலப்பரப்பை ஆய்வு செய்யும் வகையில் ‘சமுத்ராயன்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘மத்சயா-6000’ என்ற எந்திரத்தை தேசிய கடலியல் தொழில்நுட்ப கழகம் வடிவமைத்துள்ளது. இந்த எந்திரத்தையும், அதை கொண்டு செல்லக்கூடிய ‘சாகர்நிதி’ என்ற கப்பலையும் மத்திய அறிவியல் தொழில்நுட்பம்- புவிஅறிவியல்துறை மற்றும் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
பின்னர் ‘சாகர்நிதி’ கப்பலில் சுமார் 2 மணிநேரம் கடல்சார் விஞ்ஞானிகளுடன் பயணம் செய்த அவர், அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் கப்பல் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். இந்த பயணத்தின்போது தேசிய கடலியல் தொழில்நுட்ப கழகத்துக்கு சொந்தமான மேலும் 3 கப்பல்கள் ‘சாகர்நிதி’ கப்பலுடன் அணிவகுப்பில் ஈடுபட்டதையும் பார்வையிட்டார்.