• Sun. May 17th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

‘சாட்ஜிபிடி’யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!

BySeenu

May 17, 2026

உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி (ChatGPT) தளத்தில், சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த ஏஐ தளத்தின் பயனர்களாக இருக்கும் 90 கோடிக்கும் அதிகமானோர் எளிய தியானப் பயிற்சிகள் மற்றும் மனநலனை மேம்படுத்தும் கருவிகளை இனி எளிதாக பெற முடியும். மேலும் சாட்ஜிபிடி-யில் இடம்பெறும் ‘முதல் இந்தியத் தயாரிப்பு தியானச் செயலி’ என்ற பெருமையை இச்செயலி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலியின் அடிப்படை நோக்கம் குறித்து சத்குரு கூறுகையில், “உங்கள் மனம் ஒரு விழிப்புணர்வு செயல்முறையாக மாறினால், அதுவே இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அற்புதமாகும்” எனக் கூறியுள்ளார்.

சாட்ஜிபிடி தளத்தில் ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ செயலியை பயன்படுத்த, பயனர்கள் அந்த தளத்தில் இருக்கும் ஜிபிடி ஆப் ஸ்டோரில் (GPT App Store) “Miracle” என்று தேடி, மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியான செயலியை இணைக்க வேண்டும். பிறகு, அரட்டைப் பகுதியில் (Chat) “Meditate with Miracle” என்று தட்டச்சு செய்வதன் மூலம் தியானத்தைத் தொடங்க முடியும்.

‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியானச் செயலி, பயனர்களுடன் கலந்துரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தினசரி மனநிலையை கண்காணிக்கும் “லைஃப் ஹாப்ஸ்காட்ச்” (Life Hopscotch) எனும் வசதி மற்றும் தியானம் செய்வதன் மூலம் காயின்கள் மற்றும் ஷீல்டுகளை ஈட்டும் விளையாட்டு அம்சங்களும் உள்ளன. தியானத்தை முறையாகத் தொடர்வதன் மூலம் ஈட்டப்படும் காயின்களைக் கொண்டு, முன்னணி ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு நிறுவனங்களின் சேவைகளை பயனர்கள் பெற முடியும்.

இது குறித்து ஈஷா அறக்கட்டளையின் டிஜிட்டல் தயாரிப்புகளின் தலைவர் சினேகா மகபு கூறுகையில், “ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி மன ஆறுதலுக்காக சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சத்குருவின் ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியானச் செயலி அதில் இணைக்கப்பட்டிருப்பது மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை உருவாக்கும். இது அன்றாட வாழ்வில் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு நல்வாழ்வு கருவியாக இருக்கும்.

மேலும், பதற்றம், மனஅழுத்தம், தூக்கமின்மை, கவனச்சிதறல் போன்ற மனநலன் சார்ந்த சவால்களை கையாள உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனர்களின் கேள்விகளுக்கேற்ப சத்குருவின் உரைகள் மற்றும் பதில்களை வழங்கும் அம்சங்களும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன,” எனக் கூறினார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அன்று, சத்குருவால் ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ இலவச தியானச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலி வெளியான 15 மணி நேரத்திற்குள்ளேயே 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து சாதனை படைத்தது. அதே போன்று இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உட்பட 20 நாடுகளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. இந்தச் செயலி தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி, ரஷ்யன், தெலுங்கு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகளில் கிடைக்கிறது.