• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை உறுதி… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

ByP.Kavitha Kumar

Jan 3, 2025

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நகைச்சுவை நடிகர் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரி​கை​யாளர்கள் குறித்து தரக்​குறைவாக விமர்​சிக்​கப்​பட்ட பதிவை பாஜக முன்​னாள் பிரமுகரும், நடிகருமான எஸ்.​வி.சேகர் தனது முகநூல் பக்கத்​தில் பகிர்ந்​திருந்​தார். அதையடுத்து அவர் மீது பெண்​களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்​சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கக்​கோரி தமிழ்​நாடு பத்திரி​கை​யாளர் பாது​காப்பு சங்கச் செயலா​ளரான மிதார் மொய்​தீன் போலீ​சில் புகார் அளித்​தார். அதன்​பேரில் எஸ்.​வி.சேகர் மீது சென்னை மத்திய குற்​றப்​பிரிவு போலீ​சார், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பெண்​களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச்​சட்டம் என 4 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதேபோல நெல்​லை​யிலும் எஸ்.​வி.சேகர் மீது வழக்​கு ​ப​தி​யப்​பட்​டது. இந்த வழக்​கு​களில் முன்​ஜாமீன் கோரி எஸ்.​வி.சேகர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்திருந்​தார். அப்போது சர்ச்​சைக்​குரிய வகையில் கருத்து தெரி​விப்பதை வாடிக்கையாக வைத்​துள்ள எஸ்.​வி.சேருக்கு முன்​ஜாமீன் வழங்​கக்​கூடாது என பெண் பத்திரி​கை​யாளர்கள் மற்றும் பெண் வழக்​கறிஞர்கள் சங்கத்​தினர் தரப்​பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து, எஸ்.​வி.சேகருக்கு முன்​ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதி​மன்​றம், இந்த விவகாரத்​தில் எஸ்.வி. சேகருக்கு எவ்வித பாரபட்​ச​மும் காட்​டக்​கூடாது என 2018-ம் ஆண்டு அப்போதைய அரசுக்கு உத்தர​விட்​டது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.​வி.சேகர் தாக்கல் செய்திருந்த முன்​ஜாமீன் மனுவை உச்ச நீதி​மன்​ற​மும் தள்ளுபடி செய்​தது. அதன்​பிறகும் எஸ்.​வி.சேகர் கைது செய்​யப்​பட​வில்லை என்ப​தால் உயர் நீதி​மன்​றத்​தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்​பட்​டது. அதேபோல இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி எஸ்.​வி.சேகர் தரப்​பில் தாக்கல் செய்​யப்​பட்ட மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அவருக்கு எதிரான வழக்கை 6 மாதத்​தில் விசா​ரித்து முடிக்க சென்னை​யில் உள்ள எம்.பி., எம்எல்​ஏ-க்கள் மீதான வழக்​குகளை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு கடந்த 2023-ம் ஆண்டு உத்தர​விட்​டது.

அதன்படி இந்த வழக்கை விசா​ரித்த சிறப்பு நீதி​மன்ற நீதிபதி ஜி.ஜெய​வேல் கடந்​தாண்டு பி்ப்​ர​வரி​யில் பிறப்​பித்த உத்தர​வில், எஸ்.​வி.சேகருக்கு எதிரான குற்​றச்​சாட்டுகள் அரசு தரப்​பில் சரிவர நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. தனக்கு வந்த பதிவை அப்படியே பார்​வர்டு செய்​தேன் என்றும், தான் குற்​றமற்​றவன் என்றும், இதற்காக மன்னிப்பு கோரு​கிறேன் என்ற அவரது தரப்பு வாதத்தை ஏற்க முடி​யாது. எனவே எஸ்.​வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்​கிறேன் என தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​ய​வுள்ளதாக தெரிவிக்​கப்​பட்​ட​தால் ஒரு மாத சிறைத்தண்டனை நிறுத்தி வைக்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில் தனக்கு விதிக்​கப்​பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.​வி.சேகர் தாக்கல் செய்திருந்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிபதி பி.வேல்​முரு​கன், நேற்று பிறப்​பித்​துள்ள உத்தர​வில், ‘‘சர்ச்​சைக்​குரிய வகையில் கருத்து தெரி​விப்பதை மனுதாரர் வாடிக்கையாக வைத்​துள்ளார் என்றும், அவர் ஒன்றும் எழுதப், படிக்கத் தெரி​யாதவர் அல்ல என்றும், எம்எல்​ஏ-வாக பதவி வகித்​தவர் எனவும் தெரிவிக்​கப்​படும் அரசு தரப்பு வாதம் ஏற்கத்​தக்​கது. எனவே எஸ்.​வி.சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதி​மன்றம் பிறப்​பித்த உத்தரவை உறுதி செய்​கிறேன் என கூறி மேல்​முறை​யீட்டு மனுவை தள்ளுபடி செய்​தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 65பி பிரிவின் கீழ் போலீசார் சான்றிதழை வழங்கவில்லை என நடிகர் எஸ்.வி சேகர் வழக்கறிஞர் கேள்வியெழுப்பினார். அப்போது மனுதாரரே மன்னிப்பு கேட்ட பின்னர், அத்தகைய அவசியம் என்ன என நீதிபதி வினவினார்.

மேலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரும் போது, ​​​​மனுதாரர் அந்த செய்தியை வேறு யாரோ எழுதியதாகவும், அதை சரியாக படிக்காமல் கவனக்குறைவாக தனது ஃபேஸ்புக் கணக்கில் பகிர்ந்ததாகவும் கூறினார் என்பதையும் நீதிபதி சுட்டிக் காட்டினார். பெண் பத்திரிகையாளர் அவதூறு வழக்கில் நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.