உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் ரஷிய படையினர் குண்டு மழை பொழிய தொடங்கி உள்ளனர். கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கர்கிவ் நகரிலும் தாக்குதலை ரஷிய படைகள் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களுடன் சரணடைந்துவிட்டால் நல்லது என்றும் அவர் எச்சரித்தார். ரஷிய, ராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளான உக்ரைன் மக்கள் இன்று இரவு முழு உலகத்தின் பிரார்த்தனைகளுடன் இருக்கிறார்கள். ஜனாதிபதி புடின் ஒரு திட்டமிடப்பட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார். இதற்கு ரஷியா மட்டுமே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் பைடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். வெளிநாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டால் முன்னெப்போதும் அவர்கள் சந்திக்காத வகையில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். ரஷ்ய நாட்டின் கியேவில் உக்ரைன் தூதரகம் உள்ளது. மேலும் கார்கிவ் ஒடேசா மற்றும் லிவிவ் ஆகிய இடங்களிலும் தூதரகங்கள் உள்ளன. இப்போது கியேவில் உள்ள தூதரகத்தில் இருந்து அதன் பணிகளை வெளியேற்றும் பணிகள் தொடங்கியுள்ளன என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் அவசரநிலை சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பொதுமக்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லவும், தற்காப்புக்காக செயல்படவும் அனுமதிக்கும் வரைவு சட்டத்தை அங்கீகரிப்பதாக உக்ரைன் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. சோவியத் யூனியன் பிளவுப் பட்டதற்கு பிறகு தனிநாடாக உருவான உக்ரைனை ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக் கொள்ள ரஷியா முயன்று வருவதால் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் எல்லையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷியா குவித்துள்ளது.
அதே வேளையில் போர் பயிற்சிக்காகவே எல்லையில் படைகளை குவித்துள்ளதாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைகள் பயிற்சியை முடித்து முகாம்களுக்கு திரும்பி விட்டதாகவும் ரஷியா கூறியிருந்தது. ஆனால் தொடக்கம் முதலே அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷியா போர் தொடுக்க ஆயத்தமாகி வருகிறது என்று குற்றம்சாட்டி வந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் முதல் கட்ட பொருளாதாரத் தடைகளை ரஷியாவுக்கு எதிராக பிரகடனப்படுத்தியுள்ளார்.