சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுதினம் முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வகையான பயணிகளும் 15ம் தேதி முதல் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் ரயில்கள் ஆகியவற்றில் பயணிகள் வழக்கம்போல் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரிட்டர்ன் பயணச்சீட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் முன்புபோல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பயணிகள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.