பிரிட்டன் நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு, ஆங்கில கால்வாயில் நேற்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக், எரித்ரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் இருந்து உள்நாட்டு போர், வன்முறை காரணமாக வெளியேறும் அகதிகள் ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்யப்பட்ட படகில் 34 பேர் பயணம் செய்திருக்கலாம் எனவும், 31 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மைன் தெரிவித்தார். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் கூறினார். ஆனால் அவர்கள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
பிரான்ஸ் மற்று பிரிட்டனைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த அண்டு மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பலர் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடந்து வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை 25,700 பேர் ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.