கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதற்கிடையே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பெரிய வன்முறை வெடித்து பள்ளியும் சூறையாடப்பட்டது. இந்நிலையில் மாணவி மர்ம மரணம் குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழு மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரேதபரிசோதனையின்போது மாணவியின் தந்தை மற்றும் அவரது வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என்றும், பிரேதபரிசோதனையை வீடியோ பதிவாக எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். அதுமிட்டுமின்றி இறந்த மாணவியின் தந்தை, மறு பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர் உடனிருக்க வேண்டி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் அவர் கோரிக்கையை நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.