புதுச்சேரியின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி எளிமைக்கு பெயர் பெற்றவர், எப்பொழுதும் மக்களோடு மக்களாகவும், அனைத்து தரப்பினரிடமும் சகஜமாக பழகக்கூடிய குணமுடையவர், அதனாலேயே அவரை எளிய முதல்வர் என்று அழைக்கிறார்கள்,

ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 4-ம் தேதி அவருடைய பிறந்த நாளை அவரின் ஆதரவாளர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் போன்று மிக பிரம்மாண்டமாக கொண்டாடுவார்கள்.
இந்த நிலையில் நாளை மறுநாள் 4-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் எளிய முதல்வரான ரங்கசாமிக்கு புதுச்சேரி நகரெங்கும் பிரமாண்ட பேனர்கள்,கட்டவுட்டுகள் அலங்கார வளைவுகள் வைத்து, நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்குவது சிறப்பு வழிபாடு என செய்து அசத்தி வருகின்றனர்.
நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமியை பொன்னியின் செல்வன்,ரெட்ரோ சூர்யா,புஷ்பா 2 அல்லு அர்ஜுன் ,தெறி விஜய், கூலி ரஜினி,கபாலி ரஜினிகாந்த், உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்களின் கெட்டபொங்களிலும், மற்றும் பாதர் ஆஃப் புதுச்சேரி, விவசாயிகள் தலபாகையுடன் மாட்டு வண்டியில் செல்வது, தமிழக சட்டப்பேரவையில் ரங்கசாமி இருப்பது, காமராஜர் முத்தம் கொடுப்பது, மாணவர்கள் உடன் அமர்ந்து மதிய உணவு அருந்துவது நண்பர்களுடன் டீ குடிப்பது, போன்ற கெட்டப்புகளிலும் நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் இருபுறங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர்கள் சாலையில் செல்லும் பாதசாரிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இதுபோன்று பல்வேறு கெட்டப்புகளில் பேனர்கள் வைப்பதை முதலமைச்சர் ரங்கசாமி விரும்பி இரவு நேரத்தில் தனியாக காரில் சென்று ரசித்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் புதுச்சேரியில் பேனர் கட்டவுட்டு வைப்பதற்கு உயர்நீதிமன்றம் தடைவித்துள்ள நிலையில் அதிகாரிகள் அதனை முழுமையாக செயல்படுத்தவில்லை இருந்தபோதிலும் இந்த பேனர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், நடைபாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் வகையிலும் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.