சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 6 முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்கள் வழங்க தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அனுமதித்தது.
மேலும் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை ரூ.50ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் நடைமேடை டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மீண்டும் பழைய கட்டணம் ரூ.10 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், அரக்கோணம், காட்பாடி நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆனது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காலத்தில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.