அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி..,
நாங்கள் ரெய்டுக்கு எந்த காலத்திலும் கவலைப்பட்டது கிடையாது. 1976 எமர்ஜென்சி நேரத்தில் ரெய்டு என்றால் என்னவென்றே தெரியாத காலகட்டத்திலே ரெய்டை சந்தித்து, அவையெல்லாம் முறியடித்து வெற்றி பெற்ற இயக்கம் இந்தியாவிலேயே உண்டு என்று சொன்னால் அந்த இயக்கத்திற்கு பெயர் திராவிட முன்னேற்றக் கழகம். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை குறி வைத்தது என்ன காரணம்? என்றால் பத்து நாளைக்கு முன்னாடி அண்ணாமலை பேட்டி கொடுத்ததை பல ஊடகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதில் அண்ணாமலை கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியை அடைத்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்கு ஒரு பேட்டி கொடுத்தார். பாஜக என்றால் என்ன? அதனுடைய அதிகாரம் என்ன? அதனுடைய விளைவுகளை எல்லாம் இன்னும் பத்து நாளில் செந்தில் பாலாஜி சந்திப்பார் என்று பகிரங்கமாக சொன்னார். இன்று மட்டுமல்ல 2022 ஆகஸ்ட் மாதத்திலும் சொல்லி இருக்கிறார்.
ஆகஸ்ட் 2022 அண்ணாமலை கொடுத்த பேட்டி டிவியில் எல்லாம் வந்தது. ஐ.டி இப்போது பிசியா இருக்குது. அவங்க எல்லாம் பிசி எல்லாம் முடிச்சிட்டு பிறகு செந்தில்பாலாஜி வீட்டுக்கு ரெய்டு வருவார்கள் என பகிரங்கமாகவே பிஜேபினுடைய தலைவராக தமிழ் மாநிலத்தில் இருக்கிற அண்ணாமலை சொன்னார்.
செந்தில் பாலாஜி குறிவைப்பதற்கு காரணம் என்னவென்று சொன்னால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 2021 தேர்தலில் கோவை மாவட்டத்திலும், கரூர் மாவட்டத்திலும் கணிசமான இடங்களை அதிமுக கூட்டணி பெற்றது. ஆனால் செந்தில் பாலாஜி அவர்கள் அந்த இரண்டு மாவட்டத்தினுடைய பொறுப்பை தலைமைக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில்,
நூற்றுக்கு நூறு கோவை மாவட்டத்திலும் – கரூர் மாவட்டத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுக்கொடுத்தார் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களிலேயே அண்ணாமலை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பதற்கு அவருடைய பேச்சுகளிலே முன் உதாரணமாக காட்ட முடியும். ஆக இப்படிப்பட்ட காரியங்களை செய்வதற்கு தலைவர் ஊரில் இல்லாத நேரத்தில் தமிழ்நாட்டுக்குள்ளே செய்தது என்பது பிஜேபினுடைய மிகக் கேவலமான அரசியலை காட்டுகிறது என தெரிவித்தார்.