முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவால் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று இரவு 9.51 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது. மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நான் ஒரு ஆலோசகர் மற்றும் வழிகாட்டியை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிய கோடிக்கணக்கான நாம் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.