திண்டுக்கல், பழனி சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சிபிஎம் மற்றும் பொதுமக்கள் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் பழனி சாலையில், குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட பழனி சாலை, சக்தி டாக்ஸ் எதிரே உள்ள 3396 எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், நியாய விலை கடை மற்றும் பள்ளிகள் அமைந்துள்ளன. மேலும், ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியாகவும், எதிரே வழிபாட்டுத் தலங்கள் நிறைந்த பகுதியாகவும் இது காணப்படுகிறது.
இங்குள்ள மதுபான கடையால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதோடு, பள்ளி மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இக்கடையை அப்புறப்படுத்தக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடடிவக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாரியம்மாள் (சிபிஎம்) தலைமையில், இன்று சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிபிஎம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.




