சேலத்தில் பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ள நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் கோட்டமேட்டுப்பட்டி கிராமம், அண்ணா நகர் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கான பிரத்யேக நிலத்தில் பட்டியல் இனத்தவர்கள் உள்பட பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த நிலத்தில் வசித்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சு ஊடக மைய மாநில துணை செயலாளர் மற்றும் அவரது நண்பர் கனகராஜ் ஆகியோர் அருகில் வசித்து வருபவர்களுக்கு இடையூறு செய்து காலி செய்யுமாறு மிரட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட நிலத்தில் 20வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், தங்களது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டிய அவர்கள், இது தொடர்பாக ஓமலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அரசியல் செல்வாக்கு காரணமாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.