மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் மற்றும் கருப்பு நிற கலரில் குடிநீர் கலங்களாக
வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர் நிறுத்தப்பட்ட நிலையில் குடிநீர் மஞ்சள் கலந்து வருவதாக கூறி சுத்தம் செய்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால் இன்று காலை பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் தூசி படர்ந்த நிலையில் கருப்பு கலரில் கலங்கலாக வந்ததால் இதை பயன்படுத்தும் குழந்தைகள் பெரியவர்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

சில இடங்களில் வெள்ளை துணிகளை கொண்டு தண்ணீரை வடிகட்டி பிடித்தனர் இருந்த போதும் குடிதண்ணீரில் இருந்த களங்கள் போகவில்லை என கூறினார்கள். மேலக்கால் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் முறையாக பணிகளை செய்வதில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்து வரும் நிலையில் தற்போது குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யாமல் குடிநீரை வழங்குவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டி முழுவதும் தூசி படர்ந்து காணப்படுவதால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கூறுகின்றனர்.

ஆகையால் மாவட்ட நிர்வாகம் மேலக்கால் ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டிகளை போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து குடிநீர் மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




