கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, தனது 75 ஆண்டுகால கல்விச் சிறப்பைக் குறிக்கும் பவள விழா மற்றும் நிறுவன நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது.

விழாவிற்கு பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஜி. திலகவதி ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து, கல்லூரியின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு சாதனைகளை விளக்கினார்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், ஆக்ஸிலர் வென்ச்சர்ஸ் தலைவருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “ஆராய்ச்சி & மேம்பாட்டு சேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளுக்கான உலகளாவிய முதன்மை மையமாக இந்தியா மாறி வருகிறது. கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் புதிய தொழில் தொடக்க ஆதரவு ஆகிய நான்கும் எதிர்கால நிறுவனங்களின் தூண்கள். உற்பத்தி சார்ந்த வளர்ந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேறப் பொறியாளர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 5 முன்னாள் மாணவர்களான, ‘ அமெரிக்கா பாஸ்டன் டி.ஐ.ஏ இன்ஸ்டிடியூட் தலைவர் சூர்ய பிரகாஷ் கொல்லூரி,
பெங்களூரு டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் துணைத் தலைவர் சாவித்திரி சீதாராமன்,
சிங்கப்பூர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் குரோத் மார்க்கெட்ஸ் தலைவர் கிரிஷ் ராமச்சந்திரன், அமெரிக்கா நாஷ்வில் கணினி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாபு கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை ஆணையர் ஏ. சிவஞானம் ஆகியோருக்கு, சிறந்த முன்னாள் மாணவர் விருதுகள் 2026′ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

விழாவில் பவள விழா சிறப்பு மலரைச் சிறப்பு விருந்தினர் வெளியிட, அதன் முதல் பிரதியை பிஎஸ்ஜி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் ஜி.ஆர். கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட
கலந்து கொண்டனர்.




