• Fri. Apr 26th, 2024

பல்லடத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிராக அறிவித்தபடி போராட்டம்

ByS.Navinsanjai

Mar 15, 2023

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி!!கண்ணப்பன் ஸ்டில்ஸ் இரும்பு உருக்காலைக்கு எதிராக அறிவித்தபடி போராட்டம் நடைபெறும்!!ஆலைக்கு மீண்டும் அனுமதி கொடுத்தால் ரேஷன் அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைப்போம்- அனுப்பட்டி கிராம மக்கள் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அணுப்பட்டி கிராமத்தில் கடந்த 14 ஆண்டுகளாக இரும்பு உருக்கும் கண்ணப்பன் அயன் ஸ்டில்ஸ் என்ற ஆலை இயங்கி வருகிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இந்த ஆலை இயங்கி வருவதாகவும், ஆலையை சுற்றி பசுமை வளையங்கள் அமைக்கப்படவில்லை எனவும், கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் திறந்த வெளியில் கழிவுகளை கொட்டுவதாகவும், இரவு நேரங்களில் அதிகமாக புகை வெளியேற்றப்படுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று அதிகரித்து வருவதாகவும், இந்த ஆலைக்கு மார்ச் மாதத்தோடு உரிமம் நிறைவடைவதால் ஆலையை இயக்குவதற்கான உரிமத்தை மீண்டும் வழங்க கூடாது எனக் கூறி வரும் 16ஆம் தேதி அன்று அனுப்பட்டி கிராம மக்கள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.


இது குறித்த அமைதி பேச்சு வார்த்தை பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனுப்பட்டி கிராம மக்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய துணை சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா, மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். சட்டவிரோதமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் இயங்கி வரும் ஆலைக்கு மீண்டும் உரிமம் கொடுக்கக் கூடாது எனவும் ஆலைக்கான உரிமத்தை கொடுக்க மாட்டோம் என உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிடுகிறோம் எனக் கூறி கிராம மக்கள் வெளியேறியதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மேலும் 15 வருடங்களாக இந்த ஆலையை மூடக்கோரி போராடி வருவதாகவும் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியுற்ற நிலையில் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் எனவும் ஆலைக்கு மீண்டும் உரிமம் வழங்கப்பட்டால் கிராம மக்கள் அனைவரும் தங்களது ரேஷன் அட்டையை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க உள்ளோம் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *