உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புனித நீராடுகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஜனவரி 12-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மகா கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்கள், பொதுமக்கள் என கோடிக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகா கும்பமேளாவை முன்னிட்டு சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 5) பிரக்யாராஜ் நகருக்கு வருகை தருகிறார். அவர் இன்று காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். பிரதமர் வருகையையொட்டி கும்பமேளா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.