• Wed. Apr 24th, 2024

அதிமுகவின் பொதுச் செயலாளரே-சசிகலாவை வரவேற்று போஸ்டர்

ByA.Tamilselvan

Jun 29, 2022

கழகத்தை காத்திட, எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக’ என சசிகலாவை வரவேற்று அதிமுக தலைமைக் கழகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு இடையே தமிழகம் முழுவதும் போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆதரவாளர்கள் தனித்தனியாக ஒற்றைத் தலைமை தொடர்பாக போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு மத்தியில் சசிகலா தரப்பினரும் போஸ்டர் ஒட்டுவதில் களமிறங்கியுள்ளனர்.அந்த வகையில், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், ‘அதிமுகவின் பொதுச் செயலாளரே..! ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமே..! கழகத்தை காத்திட, எங்களை வழிநடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக..!’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
இதனால், அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சசிகலாவும் இணைந்துள்ளதாக பரபரப்பு கூடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *