• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

பெட்டிக்கடைக்குள் புகுந்த கார் நிலைகுலைந்த ஏழைக் குடும்பம் !!!

BySeenu

Apr 19, 2026

​கோவை, மருதமலை அடிவாரத்தில் வடவள்ளி பொம்மனம்பாளையத்தை சேர்ந்த 50 வயது மூதாட்டி சாந்தியின் பெட்டிக்கடை, நடத்தி பிழைத்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் தன்யா, தனது காதலனுடன் காரில் கோவிலுக்குச் சென்ற போது, வேகம் அத்துமீறியது. கட்டுப்பாட்டை இழந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் சாந்தியின் கடைக்குள் பாய்ந்து அவர் மீது மோதியது.

இந்த விபத்தின் காட்சிகள் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆகி காண்போரை உறைய வைத்து உள்ளது.

விபத்து நடந்த இடத்தில் கிடந்த மூதாட்டியைப் பார்த்துப் பதறிய பொதுமக்கள் முன், “நான் தான் தவறு செய்து விட்டேன், மொத்தச் செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என தன்யா வாக்குறுதி அளித்ததை அடுத்து, சாந்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

​விபத்து குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த போது, அந்த இளம்பெண் மீண்டும் மருத்துவ செலவை தான் பார்த்துக் கொள்வதாக கூறி உள்ளார்.

ஆனால், மருத்துவமனையில் சாந்தியின் நெஞ்செலும்பு உடைந்து உள்ள நிலையில், ‘ஐசியூ’ (ICU) சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அதிர்ச்சி அடைந்த சாந்தியின் மகன் அசோக்குமார், பணத்திற்காகத் தன்யாவைத் தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டு, உள்ளது.

கொடுத்த வாக்குறுதியைத் காற்றில் பறக்கவிட்டு அந்தப் பெண் மாயமானதால், பாதிக்கப்பட்ட குடும்பம் தற்போது நடுத்தெருவில் நிற்கிறது.
​கண்ணீருடன் நீதிகேட்டுச் சென்ற ஏழைக் குடும்பத்திற்கு, காவல் துறையினர் “நாங்கள் எஃப்.ஐ.ஆர் (FIR) போட்டு விட்டோம், இனி நீங்கள் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும்” என அதிகாரிகள் கூறியதாக, குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு எளிய குடும்பத்தின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து விட்டு, மருத்துவச் செலவுக்கும் வழியில்லாமல் தவிக்கவிட்ட அதிகார வர்க்கத்தின் நிழலில் உள்ளவர்களைச் சட்டம் தண்டிக்குமா ? சிகிச்சைக்கான பணமின்றி தவிக்கும் அந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு யார் ? கைகொடுப்பார்கள் என்ற கேள்விக்குறியுடன் காத்து இருக்கிறது பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்தினர் .