• Tue. Feb 18th, 2025

விவசாய சங்கத்தினர் பென்னிக்குக் பொங்கல் விழா

ByP.Thangapandi

Jan 12, 2025

முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிக்கு பிறந்த நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் 58 கால்வாய் விவசாய சங்கத்தினர் பென்னிக்குக் பொங்கல் வைத்து விழா எடுத்து கொண்டாடினர்.

தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வண்ணம் முல்லை பெரியாறு அணையைக் கட்டி கொடுத்த பொறியாளர் ஜான் பென்னிக்குக் பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் நன்றி மறவாது அறுவடை திருநாளான பொங்கல் திருநாளான்று, பென்னிக்குக் பொங்கல் வைத்து அனுசரித்து அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் கர்னல் ஜான் பென்னிக்குக் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை வளாகத்தில் உசிலம்பட்டி 58 கால்வாய் சங்க விவசாயிகள், ஜெயராஜ், சிவப்பிரகாசம், செந்தில்குமார் தலைமையில் பென்னிக்குக் பொங்கல் வைத்து விழா எடுத்து கொண்டாடினர்.

இவ்விழாவில் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த திமுக நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கபாண்டியன் தலைமையிலான நிர்வாகிகள் , அதிமுக பூமா ராஜா தலைமையிலான நிர்வாகிகள், அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் கதிரவன், பாரதிய பார்வர்ட் பிளாக் முருகன் ஜி, மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த மக்கள் அதிகாரம் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், பி கே எம் அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் ஜான் பென்னிக்குக் திரு உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து அனைத்து பொதுமக்களுக்கும் பென்னிக்குக் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வழங்கப்பட்டது.