தென்காசியில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றாலையும், படைப் பாற்றாலையும் வளர்க்கும் நோக்கில் தென்காசி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. தென்காசி மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி காலை 9. 30 மணிக்கு குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ- மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.
ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் வீதம் 3 போட்டிகளுக்கு 6 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் உரிய படிவத்தினை நிறைவு செய்து இப்போட்டி நடைபெறும் நாளில் அளிக்க வேண்டும். தென்காசி மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.