ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தங்கள் ஊரில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் மூடப்படாமல் இருப்பதற்காக ரயில் டிக்கெட் எடுத்து விட்டு, அதில் பயணம் செய்யாமல் இருக்கும் விநோதமான ஊர் மக்களைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.
உத்தரப்பிரதேச மாநிலம் ப்ரக்யராஜில் தயால்பூர் என்ற ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. இங்குதான் மக்கள் இந்த காரியத்தை செய்கின்றனர். இதற்கான காரணம் கொஞ்சம் புதிரானது மற்றும் நெகிழ்வானது. இந்திய பிரதமராக இருந்த நேரு, ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியிடம் தயால் பூரில் ஒரு ரயில்வே ஸ்டேஷனை ஏற்படுத்தக் கூறி வலியுறுத்தினார். 1954இல் ரயில்வே ஸ்டேஷனும் கொண்டுவரப்பட்டது. ஏறத்தாழ 50 ஆண்டுகள் அது செயல்பட்டது.
ஆனால், 2006இல் அந்த ஸ்டேஷன் மூடப்பட்டது. குறைந்தபட்ச வருவாய் கூட அது ஈடவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இது தொடர்பாக பேசிய மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்{ சேகர் உபத்யாயா, “குறைந்தபட்ச வருவாய் கூட ஒரு ரயில் நிலையம் ஈட்டவில்லை என்றால் அந்த ரயில்வே நிலையத்தை மூடலாம். பிரான்ச் லைனில் 25 டிக்கெட்டுகளும், ட்ரென்க் ரூட் லைன்களில் 50 டிக்கெட்டுகளும் குறைந்தபட்சம் விற்க வேண்டும். அது இல்லாத போது ரயில் நிலையத்தை மூடலாம்” என்றார்.
ஆனால், மக்கள் போராட்டத்திற்கு பிறகு 2022ஆம் ஆண்டு அந்த ரயில் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. ஆனால், பெரும்பாலான ரயில்கள் அங்கு நிற்பதில்லை. இப்படியான சூழலில் மீண்டும் அந்த ரயில்வே நிலையம் மூடுவிழா காணுவதை மக்கள் விரும்பவில்லை. எனவே, இந்த ரயில்வே நிலையம் மீண்டும் மூடுவிழா கண்டுவிடக்கூடாது. அதற்காகதான் நாங்கள் பயணம் செய்கிறோமோ இல்லையோ, டிக்கெட்டிகளை வாங்குகிறோம். பெரும்பாலான ரயில்கள் இங்கு நின்று சென்றால், எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார்கள் அந்த ஊர் வாசிகள்.
“இந்த வழித்தடத்தில் செல்லும் ஒரே ஒரு ரயிலால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால், இந்த வழித்தடத்தில் வேறு சில ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்ய விரும்புகின்றனர். இதனை மக்கள் டிக்கெட் மட்டும் எடுப்பதன் மூலம் அரசுக்கு சொல்ல விரும்புகிறார்கள்” என்கிறார் ரயில்வே ஆப்ரேட்டரான புனித் சிங். 2022 ஜனவரி மாதம் இந்த ரயில்வே நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு மாதம் 700 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்று இருக்கின்றன. ஆனால், இப்போது அதுவும் சரிய தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.