போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல்” “தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல விரோத அரசாக இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசிற்கு தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு ஆதரவு வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் மார்ச் 28 மற்றும் 29 ல் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தத்தின் போது போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்; பணிக்கு வருகை தரவில்லை எனில் ‘ஆப்செண்ட்’ மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.