


நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்து செயல்படும் இப்பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. அதே போன்று நடனமாடிய அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்கள் சினிமா பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு வண்ணமிகு ஆடைகள் உடுத்தி நடனமாடி அசத்தினர்.

கரகாட்டம், பரதநாட்டியம், கோலாட்டம் உள்ளிட்ட பல்சுவை கலை நிகழ்ச்சியாக மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது காண்போரை பரவசமாக்கியது. அரசு பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்களின் அசத்தலான நடனங்களை பொது மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் சிவக்குமார், தலைமையாசிரியர் சுப்ரமணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.கே.கண்ணன், பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வாலர்கள், சத்துணவு ஊழியர்கள், காலை உணவு பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

