• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பல்லடம் செய்தியாளருக்கு அறிவாள் வெட்டு – காவல்துறைக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம்…

BySeenu

Jan 25, 2024

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா நியூஸ் 7 செய்தியாளரை அறிவாளால் சரமாரியாக வெட்டி தப்பியோடிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், தன்னை மர்ம நபர்கள் பின் தொடர்வதாக 5 மணி நேரத்திற்கு முன்பாகவே காவல்துறையினருக்கு தகவல் அளித்தும், அஜாக்கிரதையாக இருந்த காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் நேச பிரபு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் காமநாயக்கன்பாளையம் பகுதியில் தனது வீட்டிலிருந்த நேசபிரபுவை நேற்று பிற்பகல் முதலே பதிவெண் இல்லாத இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இது குறித்து நேசபிரபு காவல்துறையினருக்கு தனது செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க தவறியுள்ளனர். இந்த சூழலில் இரவு 9 மணியளவில் செய்தியாளர் நேசபிரபு வீட்டிலிருந்து வெளியே வந்த நேரம் பார்த்து அவரை கண்காணித்து விரட்டிய ஆறு பேர் கொண்ட கும்பல் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வைத்து சரமாரியாக அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நேசபிரபு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பியோடிய கும்பலை உடனடியாக காவல்துறையினர் கைது செய்யவேண்டும் எனவும், முன்கூட்டியே தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த காவல்துறைக்கு சக பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.