மதுரை பாலமேட்டில் இன்றுகாலையில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளது. மாடுபிடி வீரர் ஒருவர் மரணமடைந்தது பெருத்த சோகத்த ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 சுற்றுகள் நடத்தப்பட்டு அனைத்து காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. 800 காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். 23 காளைகளை அடக்கி தமிழரசன் என்பவர் முதல் பரிசு வென்றார். 19 காளைகளை அடக்கி மணி என்பவர் 2ஆம் இடத்தை பிடித்தார். 15 காளைகளை அடக்கிய ராஜா மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆனால், தனது நண்பர் அரவிந்த் ராஜ் உயிரிழந்த சோகத்தில் ராஜா பாதியில் வெளியேறினார். முதலிடம் பிடித்த தமிழரசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த மணி என்பவருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் டூவீலர் வழங்கப்பட்டது.
மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்த மதுரை ரெங்கராஜபுரம் கருப்பண்ண சுவாமி கோயில் காளை கருப்பன் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த அரவிந்த் ராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், சங்கர் என்ற 16 வயது சிறுவன் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.