நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று (மார்ச் 16) நடைபெற்றது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா 32, கேப்டன் சல்மான் ஆகா 18, ஜகன்தத் கான் 17 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கை ரன்னை தொடவில்லை. தொடக்க வீரர்களான முகமமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் ஆகியோர் முதல் 8 பந்துகளுக்குள்ளே ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினர். தொடர்ந்து இர்பான் கான் 1, ஷதப் கான் 3 ரன்களில் நடைய கட்ட 4.4 ஓவர்களில் 11 ரன்களுக்கு 4 விக்கெட்களை தாரை வார்த்த பாகிஸ்தான் அணியால் அதன் பின்னர் மீள முடியாமல் போனது. நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி 4, கைல் ஜேமிசன் 3, இஷ் சோதி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரனக்ள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டிம் செய்ஃபர்ட் 44 ரன்கள் எடுத்தார். ஃபின் ஆலன் 29 ரன்களுடனும், டிம் ராபின்சன் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது டி20 போட்டி மார்ச் 18-ம் தேதி டூனிடின் நகரில் நடைபெறுகிறது.