கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது
கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தொகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன், ரூ. 60 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளார். மேலும் இரு வேறு சமூக மக்களிடையே விரோதத்தைத் தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை விநியோகித்தும், வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார்.
இது தவிர அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல ஓ.எஸ்.மணியன் பயன்படுத்தியுள்ளார் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, ஓ.எஸ்.மணியன் அவர்களின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் தேர்தலில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் வேதரத்தினத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.