அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மாயத்தேவர் வயது மூப்பு காரணமாக திண்டுக்கல்லில் இயற்கை எய்தினார். அவரது உடல் திண்டுக்கல் சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
அவரது உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் . அவருடன் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கோபால கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் உடன் இருந்தனர். அஞ்சலி செலுத்திய பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியபோது,
இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஒன்றரை கோடி தொண்டர்களின் நீங்காத இடம் பெற்று இருக்க கூடிய இரட்டை இலை சின்னத்தை யாராலும் வெல்ல முடியாத அந்த சின்னத்தை அதிமுகவிற்கு தந்தவர் மாயத்தேவர். அதிமுகவில் இடம்பெற்றுள்ள எல்லோரும் மதிக்கக் கூடிய அவர் மறைந்தாலும் அதிமுக தொண்டன் இருக்கும் வரை அவரது நினைவு அனைவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கும் என்றார். மேலும் வரும் காலங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.