ஓபிஎஸ் அவர்கள் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பேசியது பெரும் விவாதத்திற்கு உள்ளாகிவருகிறது. கட்சியில் சில ஆமோதித்தும், சிலர் எதிர்த்தும் வருகின்றனர். இதனால் கட்சி இரண்டாக பிளவுற்று நிற்கிறது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மகளுக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் கடந்த மாதம் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இன்று தஞ்சை அருகே பூண்டி புஷ்பம் கல்லூரியில் திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது. இதில் வி.கே.சசிகலா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக தஞ்சையில் உள்ள தனியார் விடுதியில் மருது சகோதரர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த டிடிவி.தினகரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு. எனவே இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம். ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே பேசியுள்ளார்” எனத் தெரிவித்தார்.