மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மூடைகளாகவும் மற்றும் நெல் குவியலாகவும் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

மேலும் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதியில் உள்ள பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்களை நாராயணபுரம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருவதால் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை அந்தந்த பகுதிகளில் திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதால் அறுவடைக்கு தயாராக உள்ள நெல்மணிகளை அறுவடை செய்ய தாமதம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் துணை ஆட்சியர் சுகிபிரேமலா மற்றும் மண்டல துணை மேலாளர் மணிகண்டன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் விவசாயிகளின் நெல்களா அல்லது வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்கிறார்களா எனவும் நெல்லின் ஈரப்பத தன்மை குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் கூடுதல் லாரிகளை வரவழைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினர் இதனை அடுத்து நான்கு லாரிகளை உடனடியாக வரவழைத்த அதிகாரிகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடந்த நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற சப் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அங்கும் கொள்முதல் நிலையங்களில் நெல்கள் தேங்கி கிடைக்கின்றனவா
என ஆய்வு செய்தனர். மேலும் நெல்லில் ஈரப்பதம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் கொள்முதல் நிலையங்கள் குறித்து வேறு ஏதும் புகார்கள் உள்ளனவா எனவும் கேட்டனர். அப்போது விவசாயிகள் நெல்கள் இல்லாத கொள்முதல் நிலையங்களில் அனைத்து பகுதி விவசாயிகளும் அறுவடை செய்த நெல்களை கொட்டுவதற்கு அனுமதி தர வேண்டும்.

ஏனென்றால் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் இருப்பதால் பல்வேறு இடங்களில் அறுவடை செய்யப்படும் விவசாயிகள் ஒரே கொள்முதல் நிலையத்திற்கு செல்லும்போது கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஆகையால் நெல்கள் குறைவாக உள்ள கொள்முதல் நிலையங்களில் அனைத்து பகுதி விவசாயிகளும் வந்து நெல்லை அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.




