மருது சகோதரர்களின் 220 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதியன்று மருது சகோதர்கள் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை தெப்பக்குளத்தில் அமைந்திருக்கும் மருதிருவர் சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801ஆம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசால் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் மூன்று தினங்களுக்கு பின் மருது சகோதரர்களின் உடல் இவர்கள் கட்டிய காளையார் கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணமடைந்த மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் மாமன்னர் மருது சகோதரர்களின் 220வது குருபூஜை விழாவை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுசகோதரர்கள் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் .