ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக முடிவு செய்யும். அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம் என, எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை தலைமை கழகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குச்சாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். ஓபிஎஸ் பணத்தைக் கொடுத்து கூட்டத்தை கூட்டி உள்ளார். திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக் கொள்ளும். எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக முடிவு செய்யும். அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். அதிமுகவை பாஜக எந்த விதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என எப்போதும் பாஜக வற்புறுத்தியதில்லை. தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது” எனக் கூறினார்.