• Mon. Apr 29th, 2024

கேரளாவில் இனி சட்டப்படியான திருமணம் மட்டுமே செல்லும்..,கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

Byவிஷா

Jun 15, 2023

கேரளாவில் இனி சட்டப்படியான திருமணம் மட்டுமே செல்லும் என கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கேரளாவில் சேர்ந்த இந்து – கிறிஸ்தவ ஜோடி ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதற்காக அவர்கள் ஒப்பந்தத்தையும் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு 16 வயது குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த தம்பதியினர் தொடர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் விவாகரத்து கோரி ஒரு குடும்ப கோர்ட்டை நாடி உள்ளனர். அப்போது அவர்களின் திருமணம் சிறப்பு திருமண சட்டத்தின் படி நடைபெறவில்லை எனக் கூறி அந்த தம்பதியின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து நீதிபதிகள் முகமது முஸ்தாக், சோபி தாமஸ் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சேர்ந்து வாழ்வதை இன்னும் திருமணமாக சட்டம் அங்கீகரிக்கவில்லை. தனிநபர் சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம் போன்ற மதசார்பற்ற சட்டத்தின் படி நடைபெற்ற திருமணத்தை தான் சட்டம் அங்கீகரிக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ முடிவெடுத்த ஒரு ஜோடி அதனை திருமணம் எனக் கூறவும் அதன் அடிப்படையில் விவாகரத்து கோரவும் முடியாது.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொள்ளப்பட்ட எந்த திருமணமும் விவாகரத்து வழங்குவதற்கான சட்டத்தின் கீழ் இதுவரை அங்கீகாரம் பெறவில்லை. அதனால் தற்போது குடும்ப கோர்ட் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றிருக்கக் கூடாது. அதனை தள்ளுபடி செய்ததற்கு பதிலாக விசாரணைக்கு ஏற்றதல்ல என திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட ஜோடி தங்களுக்கான தீர்வை வேறு இடத்தில் தேடிக் கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *