• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்… முதல்வர் அறிவிப்பு…

Byவிஷா

Jan 5, 2024

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன், ரொக்கமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் சேர்த்து தரப்படும்.
கடந்த ஆண்டுபோல, ரூ.1,000 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் இருந்த நிலையில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க ரூ.238 கோடியே 92 லட்சத்து 72,741 நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான விவரங்கள் இடம் பெற்றுள்ளதே தவிர, ரொக்கப் பரிசு தொடர்பான அறிவிப்பு இல்லை. இதனால் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகுப்புடன் வழக்கம்போல பணமும் வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற நல்ல செய்தியும் வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.