கோவையில் 2.5 டன் எடையில், 20 அடி உயரத்தில், 247 தமிழ் எழுத்துகளால் உருவான பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குறிச்சி குளம் பகுதியில், தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2.5 டன் எடையிலான இரும்பைக் கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குறிச்சி குளத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு சுமார் 2.5 டன் எடையில் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, பொதுமக்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
இந்த சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். மேலும் கோவை மாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவை மக்கள் மற்றும் வெளிநாடு சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த சிலை முன்பாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அனைவரும் அனுமதிக்கப்படுவதால் கோவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.