தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பல்வேறு தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன. அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு இதன் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இதேபோன்று, தென்ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு வந்த விமான பயணிகள் 624 பேரிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்தது. இதில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என டச்சு நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
கனடாவில் இரண்டு நபர்களுக்கு புதியவகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஓமிக்ரான் வைரசின் பரவல் காரணமாக ஏழு ஆப்பிரிக்க நாடுகளின் பயணத்திற்கு கனடா தடை விதித்திருந்தது. ஆனால் அதில் நைஜீரியா இடம்பெறவில்லை.
இந்த சூழலில் சமீபத்தில் நைஜீரியாவுக்குச் சென்ற இரண்டு நபர்களிடம் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் நோயின் பாதிப்புகளை கண்டறிந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. தற்போது இரண்டு நோயாளிகளும் தனிமையில் உள்ளனர், அதே நேரத்தில் பொது சுகாதார அதிகாரிகள் அவர்களின் நெருக்கமாக இருந்தவர்களின் தகவல்களை சேகரித்த் வருகின்றனர்.
இதற்கிடையே ‘ஒமிக்ரான்’ பாதிப்பு காரணமக அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன.