வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த சூழலில், அதி கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு, 10 நாட்களுக்குள் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்நிலையில், கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிவர்புயல் மற்றும் கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது, கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் அல்லது அதற்குமேல் வழங்க வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது” என்று அதில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்