

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிட்டிருந்தனர்.
இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா, இல்லையா..? என்பதை தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வரும் ‘நம்பர் ஒன்’ வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்றவருமான நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்தது.ஏற்கெனவே பல முன்னணி வீரர்கள் ஒதுங்கிய நிலையில், ஜோகோவிச்சும் பின்வாங்கினால் போட்டி களையிழந்து விடும் என்பதால் அவரை விளையாட வைக்க, அவருக்கு மட்டும் மருத்துவ விதி விலக்கு அளிக்கப்படுவதாக முதலில் போட்டி அமைப்பாளர்களால் கூறப்பட்டது.
இந்நிலையில், போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் சென்ற நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டது. இதனால், விமான நிலையத்திலேயே அவர் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.விசா ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் செர்பியா திரும்பினார். தங்கள் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் அவமதிக்கப்பட்டு விட்டதாக செர்பியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசு தரப்பில் கூறுகையில், ‘கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோரிய மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்க நோவாக் ஜோகோவிச் தவறிவிட்டார். அதனாலேயே அவரது விசா ரத்து செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.